அடுத்து வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது; நீதிமன்றில் உறுதி

🕔 June 28, 2019

சிறையிலுள்ள கைதிகள் எவருக்கும் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 07 நாட்களுக்குள் மரண தண்டனை எதுவும் நாட்டில் நிறைவேற்றப்பட மாட்டாது என, சிறைச்சாலைகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்தாது இருக்க, இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிழக்கிழமை அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவாதத்தை சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கியது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அழைப்பாணைக்கு அமைய, மன்றில் ஆஜரான சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே.டப்ளியூ. தென்னகோன் இந்த விடயத்தை கூறினார்.

எதிர்வரும் நான்கு நாட்களுக்குள் யாராவது கைதிக்கு மரண தண்டனை நிறைவேறற்ப்பட உள்ளதா என்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி யசந்த கோடாகொட சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் வினவியதற்கு பதில் வழங்கிய ஆணையாளர்; மேற்படி உறுதியை வழங்கினார்.

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்துவதை நிறுத்துவதற்காக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மலிந்த செனவிரத்ன என்பவர், மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கட சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். 

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அதனூடாக பாரிய மனித உரிமை மீறல் ஏற்படும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்