வீதியோரங்களில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப் படிகளை அகற்றுமாறு, கல்முனை மாநகர முதல்வர் அறிவுறுத்தல்

🕔 September 27, 2018
 – அஸ்லம் எஸ். மௌலானா –

ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை, ஒரு மாத காலத்துக்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த அறிவுறுத்தலில்  தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில், வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இது வீதிகளின் அகலத்தை குறைத்திருப்பதுடன் போக்குவரத்திற்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பதை எல்லோரும் அறிவோம். இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன.

எனவே, இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போர் அப்படிகளை தாமாகவே அகற்றி, வீதிப் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள இடைஞ்சல்களையும் விபத்துக்களையும் தவிர்ந்து கொள்வதற்கு உதவுமாறு மாநகர முதல்வர் என்ற ரீதியில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதற்காக எமது மாநகர சபையினால் சம்பந்தப்பட்டோருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட ஏற்பாடுகளின் கீழ், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, குறித்த கட்டுமானங்கள் மாநகர சபையினால் அகற்றப்படும் என்பதுடன், அதற்கான செலவுகள் மற்றும் வழக்குச் செலவுகள் என்பவற்றுடன் தண்டப்பணமும் அவர்களிடம் இருந்து அறவிட வேண்டியேற்படும் என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருகின்றேன்.

ஆகையினால் மேற்படி எமது அன்பான அறிவுறுத்தலுக்கு செவிசாய்த்து, படிக்கட்டுமானங்களை குறித்த கால அவகாசத்தினுள் அகற்றி, சீரான வீதிப் போக்குவரத்துகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்