ஊடகவியலாளர் அறூஸுக்கு அச்சுறுத்தல்; அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் புகார்

🕔 June 23, 2018
– பாறூக் ஷிஹான் –

தொலைபேசி ஊடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, ஊடகவியலாளர் எஸ். அறூஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை, இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் நியாயமான கருத்துக்களை நசுக்குவதற்கு சிலர் முற்படுவதாக, அறூஸ் தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளும் அவர்களின்  அடிவருடிகளும் மேற்கொள்ளும் இவ்வாறான கீழ்த்தரமான  செயற்பாடுகளினால், ஊடகவியலாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் ஊடகவியலாளர் அறூஸ் இது குறித்து கூறியுள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இன்று எனக்கு இவ்வாறான மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. நாளை மற்றுமொரு ஊடகவியலாளருக்கு வரும். இதனை தடுக்காமல் விட்டால், ஊடக சுதந்திரம் பலத்த சவாலுக்கு உட்படும்.

எமது பிரதேசங்களில் ஊடகவியலாளர்களுக்கு சுயாதீனமாக இயங்க முடியாதுள்ளது. இதற்கு அரசியல்வாதிகளின் போக்கிரித்தனமும் அவர்களுடைய அடிவருடிகளின் கீழ்த்தனமாக நடவடிக்கைகளுமே காரணமாகும்.

மக்களின் தேவைகளுக்காக ஊடக துறையில் எழுதி வருகின்றோம். ஆனால், ஊழல் செய்கின்ற பலருக்கு எமது எழுத்தாயுதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்டவர்கள் – ஊடகவியலாளர்களை பல வழிகளில் அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சிக்கின்றனர்.

இதனை கைகட்டி பார்த்திருக்க முடியாது. எனக்கு அச்சுறுத்தல் விடுத்த தொலைபேசி இலக்கம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பொலிஸ் மா அதிபருக்கும்  அறிவித்துள்ளோம்.

எனவே ஊடகத்துக்கு எதிரான  அராஜகம் தலைதூக்குவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும். இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்