புலி உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு, நிதி பெற்றுக்கொடுத்தார் கோட்டா; மங்கள குற்றச்சாட்டு
யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொடுத்துள்ளார் என்று, அமைச்சர் மங்கள குற்றஞ்சுமத்தியுள்ளார்.
அமைச்சர் மங்கள இவ் விடயத்தினை நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இதன்போது, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக, காாணமல் போனோர் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்த பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மைகளை கண்டறியும் நீதிமன்றத்தை ஒத்த நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், தவறுகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தண்டனைகள் பெற்றுக்கொடுப்பதற்காக இது அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள கலப்புமுறை நீதிமன்றம் போன்றதல்லாமல், இது முழுமையாக தேசிய நன்மைக்காக உள்நாட்டவர்களை அடிப்படையாகக் கொண்டுஅமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைக்கப்படவுள்ள நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கடமையாற்றுவார்கள் என, தான் ஒரு போதும் அறிவிக்கவில்லையென்று தெரிவித்த அமைச்சர் மங்கள, தேவை ஏற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படும் என்று தெரிவித்தார்.