லசந்த கொலையாளிகள் கைது செய்யப்படுவதை, அரசாங்க பெரும்புள்ளி தடுப்பதாக குற்றச்சாட்டு
ஊடவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி – ரகசிய வாக்கு மூலம் வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை மறுதினம் 21ஆம் திகதி பகல் 1.00 மணிக்கு, ரகசிய வாக்குமூலத்தை வழங்குமாறு கல்சிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் திரட்டியுள்ள ஆதாரங்களை, ஹேமந்த அதிகாரியின் வாக்குமூலம் உறுதிப்படுத்தும் என, பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த – உண்மையை மறைத்தால், உயர் ராணுவ அதிகாரியொருவர் மீண்டும் விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை நடைபெற்ற காலத்தில் ராணுவ புலனாய்வு பிரிவில் உயர் பதவி வகித்த தற்போதைய ராணுவ அதிகாரியொருவர், லசந்தவின் கொலையில் தொடர்புபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லசந்த கொலை தொடர்பான சந்தேக நபர்களை கைது செய்வதை, அரசாங்கத்திலுள்ள அதிகாரம்மிக்க பெரும்புள்ளி ஒருவர் தடுத்து வருவதாக, ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.