வெளிநாட்டில் இருப்பதால் வர முடியாது; பஷிலின் மனைவி, மகள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு
பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், இன்று வெள்ளிக்கிழமை தம்மால் ஆஜராக முடியாது என, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா மற்றும் மகள் தேஜானி ஆகியோர் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தாங்கள் இருப்பதனாலேயே, ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
பாரிய நிதி மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு, பஷில் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் மகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று ஏற்கனவே, இம்மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் முன்பாக இவர்களை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், அப்போதும் இவர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.