மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச
அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரசாங்கத்தினதும், அரசாங்கத்துக்கு ஆதரவான எதிர் கட்சியினதும் திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாகவே பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்பது தெளிவாகிறது.
ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யவிருப்பதாக, ஜே.வி.பி உத்தியோகப்பற்றற்ற இணையத்தளம் ஒன்றின் ஊடாக முன்னறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நான் கூறியதற்கு, இது சிறந்த ஆதாரமாகும்.
வற் வரி அதிகரிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் மற்றும் புலிப் பயங்கரவாதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கான மக்கள் எதிர்ப்பை திசை திருப்பவே பஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்”.