இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்: ஐ.நா.வில் சந்திரிக்கா
🕔 May 12, 2016



இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பொறிமுறையாகவே, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களை மையப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் ஐ.நா.வின் பொது கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
“இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
நாட்டில் யுத்தம் முடிவடைந்து 07 வருடங்களாகிய போதும் இனங்களிடையே ஒற்றுமை இல்லை. இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் தவறிவிட்டது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது. இதன் ஒரு பொறிமுறையாகவே எதிர்க் கட்சித் தலைவராக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதில் நாட்டின் இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. இதுவொரு முக்கியமான விடயமாகும்.
மேலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சமாதானம், சம உரிமைகளை ஏற்படுத்துவதன் மூலமே நிலையான சமானதானத்தை எட்ட முடியும். மாறாக ராணுவ நடவடிக்கைகள் மூலம் சமாதானத்தை எட்ட முடியாது” என்றார்.


Comments



