தங்க வேட்டை: மேஜர் நெவிலின் காணியை, தோண்டும் படலம் தொடர்கிறது
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராய்ச்சிக்கு சொந்தமான, ஹம்பாந்தோட்டை – மெதமுலன பகுதியியிலுள்ள காணியை, தோண்டும் நடவடிக்கை இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் காணியில் தங்கம் மற்றும் பணம் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே, மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் பெகோ இயந்திரங்களின் உதவியுடன் சுமார் 06 மணித்தியாலங்கள், தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது.
ஆயினும், குறித்த காணியிலிருந்து நேற்று எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே, இன்றைய தினமும் மேற்படி நடவடிக்கை தொடர்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளில் மூவர், பணச் சலவைக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்து, அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. அந்த மூவரில் மேஜர் நெவில் வன்னியாராச்சியும் ஒருவராவார்
இவருடைய வங்கி நடவடிக்கை தொடர்பில், புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கைகளை வழங்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.