அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம்

🕔 July 24, 2024

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் நீண்ட காலமாக குளிரூட்டி இல்லாத நிலையிலேயே, அங்கு மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

குளிரூட்டி இல்லாத இடத்தில் மருந்துகள் சேமிக்கப்படும் போது – அவை வீரியமிழக்கவும், பழுதடையவும் சாத்தியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் – புதிய கட்டடத்துக்கு பல சேவைகள் கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும், மருந்தகம் மற்றும் மருந்துக் களஞ்சியசாலை போன்றவை முன்னைய கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டி பொருத்துமாறு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்துக்கு பலமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிரூட்டி இல்லாத இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மருந்துகள் செயலிழந்த நிலையில் அல்லது பழுதடைந்த நிலையில் – நோயாளர்களுக்கு வழங்கப்படுமாயின், அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே பொறுப்பேற்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்