ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்
![](https://puthithu.com/wp-content/uploads/2022/01/Sagala-kariyavasam-01.jpg)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் எந்தவொரு நபரின் பெயரையும் முன்வைக்கவில்லை. சரியான நபர் சரியான நேரத்தில் முன்வைக்கப்படுவார். எங்கள் கட்சி மொட்டு சின்னத்தின் கீழ் வேட்பாளரை முன்னிறுத்தும்“ எனவும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக மாட்டாரா?
பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மொட்டு சின்னத்திலேயே முன்னிறுத்தப்படுவார்.
எனவே அவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி மொட்டு கட்சியின் உறுப்புரிமைய பெற வேண்டும். அப்படியானால் பரிசீலிப்போம்” என்றார்.