திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

🕔 May 31, 2024

.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

”குறித்த பாடசாலை மாணவிகள் – பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மறையும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே, அந்த பாடசாலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன”.

”காதுகள் மறைக்கப்பட்ட நிலையில் பரீட்சை எழுதியமை – பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்த பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின், இனப் பாகுபாட்டின் வெளிப்பாடுதான் இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிவதாகவும் இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

”பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை, பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஒரேமொழியை பேசும் நாம் – இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற்றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்

இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை.

கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்