கெஹலியவின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பிணை கோரி தாக்கல் செய்த – மறுசீராய்வு மனுவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபர் ஆட்சேபித்தமையினை அடுதது, கெஹலியவின் பிணை விண்ணப்பம் – மார்ச் மாதம் முதன்முறையாக நிராகரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரின் மகள் சமிந்திரி ரம்புக்வெல்ல, தனது தந்தையை நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் உதவியுடன் – போலியான ஆவணங்களை உருவாக்கி, தரமற்ற 22,500 இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணையில் தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 130 மில்லியன் ரூபாய் வருமானம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.