மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம்

🕔 March 13, 2024

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for Gen-Z” ஊடகத் திட்டம் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள், கல்விமான்கள் மற்றும் பிரபல ஊடகவியலாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றுடன் இணைந்து இந்த செயலமர்வுகள் நடத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு 31 பாடசாலை ஊடகப் பிரிவுகளிலிருந்து 158 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இதற்கு யுனிலீவர் லங்கா, SLIT கல்வி நிறுவனம், லங்கா ஐஓசி மற்றும் மகவெலி நிலையம் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க; “தமது கருத்துகளை மாத்திரம் தெரிவிக்கும் தற்போதைய ஊடகங்களின் செயற்பாடுகள் சமூகத்தை தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளது. எனவே, பாடசாலை மாணவர்களுக்கு ஊடகக் கல்வியை வழங்குவது மிகவும் அவசியமானது” எனத் தெரிவித்ததோடு, இதிலிருந்த மாணவர்கள் உச்ச பயனனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பெறுமதியான சந்தர்ப்பத்திற்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

சொந்த விருப்பு வெறுப்பின் படி நடக்கும் ஊடகங்கள்

ஜனாதிபதியின் செயலாளர் மேலும் கூறுகையில்;

“இந்த பாடநெறியில் பல தொழில்நுட்ப விடயங்கள் உள்ளன. பல நிறுவனங்களுக்குச் சென்று பெறக் கூடிய அறிவை – இந்த ஒரு பாடத்திட்டத்தின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஏன் ஊடகக் கல்வி வழங்க வேண்டும்? பாடசாலை மணாவர்கள் ஏன் ஊடகக் கல்வியைப் பெற வேண்டும்? இலங்கையில் உள்ள பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் தமது கருத்தை நாட்டுக்கு வழங்குவதைத் தான் செய்கின்றன. இது மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடு. ஊடக அமைப்பு தனது சொந்த ஊடக விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்படுகின்றன. மக்களாகிய நாம் அதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் தவறான பாதையில் செல்ல வேண்டியிருக்கும். அதனைப் புரிந்துகொள்வதே இந்தப் பாடநெறியின் பிரதான அம்சமாகும்”.

“நாங்கள் எண்கணிதம் கற்கும் சமயத்தில், அந்த பாடத்தை அதிபர் எமக்குக் கற்பிப்பார். அவர் உயரமான தேசிய ஆடைகளை அணிந்து வரும் ஒரு ஆசிரியர். அவர் கரும்பலகையில் எண்கணித சிக்கல்களைத் தீர்ப்பார். ஆனால் அந்த பிரச்சினையை தர்க்க ரீதியாகத் தீர்க்கும் முறையை நாங்கள் கற்பிக்கவில்லை. பாடசாலை காலங்களிலும், பல்கலைக் கழக நாட்களிலும் பிரச்சினைகள் பற்றிய கோட்பாட்டு அறிவு நமக்குக் கொடுக்கப்பட்டாலும், அவற்றைத் தீர்க்கும் தர்க்கம் தொடர்பில் எமக்குக் கற்பிக்கப்படவில்லை. அன்று வழங்கப்படாத அறிவை இன்று வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம். ஊடக நிறுவனங்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் அவர்களின் விருப்பங்களை புரிந்து கொள்ளும் திறன் மாணவர்களுக்கு ஏற்படும்.

ஊடகங்கள் காட்டும் ‘சொசேஜஸை’ மட்டும் தான் சாப்பிட வேண்டுமா? பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது அதிலுள்ள மெருகூட்டல்களை நாம் ஏற்க வேண்டுமா என்பதை இதன் ஊடாக அறிய வாய்ப்பு ஏற்படும். இல்லையென்றால், எங்கள் சொந்த கருத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோமா என்பதை இந்த பாடநெறியின் மூலம் புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்குக் கிடைக்கும். இதன் ஊடாக இலங்கையின் எதிர்காலத்தை சிறந்த இடத்திற்கு இட்டுச் செல்ல முடியும்” என்றார்.

பிள்ளைகளின் மனநலமும் முக்கியமானது

கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா இங்கு பேசுகையில்;

“நமது பிள்ளைகளின் கல்வி அறிவைப் போலவே மனநலமும் மிகவும் முக்கியமானது. பிள்ளைக்கு மனநலம் சரி இல்லை என்றால், அரச பதவி கிடைத்தாலும் பயனில்லை. எனவே, இதுபோன்ற ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்வது மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வாறான பெறுமதிமிக்க வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

“இன்று, தனியார் மற்றும் அரச துறைகளில் உள்ள புதிய பணியாளர்களைப் பற்றி கேள்விப்படுவது நல்ல விடயமல்ல. ஒத்துழைப்புடன் செயல்பட முடியாது. படைப்பாற்றல் இல்லை. சான்றிதழ்கள் மட்டுமே உள்ளன. அதைத் தாண்டி ஏதாவது பெற, இது போன்ற மேலதிக திட்டத்தை ஏற்பாடு செய்வது அவசியம். புத்தக அறிவை விட – தர்க்கரீதியாக சிந்தித்து ஒத்துழைப்புடன் செயல்படும் பிள்ளைகளின் தலைமுறை இன்று நமக்குத் தேவை.

தர்க்க ரீதியாக சிந்திக்கவோ, ஒத்துழைப்புடன் செயற்படவோ, ஆக்கப்பூர்வமாக செயல்படவோ திறன் இல்லாவிட்டால், பிள்ளைகள் கற்றுக்கொள்வது சமூகத்துக்குச் சரியாக செல்லாது. எனவே, மனப்பாடமாக வாசிக்கும், பிறரைப் பின்பற்றும் ஊடகக் குழு உருவாகக் கூடாது. நாங்கள் வேறு யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. உங்களுக்கான தனித்துவமான முறை உங்களிடம் உள்ளது.

உங்களுக்கான தனித்துவமான அந்த வடிவம் உங்களிடம் உள்ளது. உங்களுக்குத் தனித்துவமான அந்த போக்கை கண்டுபிடியுங்கள். நீங்கள் சொல்வதை மற்றவர்களுக்கு சரியாக தெரிவிக்க வேண்டும். காண்பதையும் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். தனியாக செய்யாமல் கூட்டாக ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள்” என்றார்.

நல்ல ஊடகவியலாளர்களை உருவாக் முடியும்

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க கூறுகையில்;

“ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் இன்று கெக்கிராவ கல்லூரியில் ஆரம்பமானது. எங்கள் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த தருணம் மூன்று தரப்பினர்களால் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார். அதன்படி, தனியார் நிதி உதவியுடன் இந்த தனித்துவமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது.

இத்திட்டம் வெற்றிபெற, பிள்ளைகளுக்கு பெரியவர்களின் வழிகாட்டுதல் அவசியம். 16 வார நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், பிள்ளைகளுக்கு ஊடகத்தின் பின்னணி, கல்வி கற்பித்தல் செயல்முறை மற்றும் பாடச் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அக்காலப் பகுதியில் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களும் பிள்ளைகளுக்கு தேவையான அறிவை வழங்குவதற்கு ஆதரவளிக்கின்றன.

பாடசாலை ஊடகவியலாளர்கள் ஊடகத்துறையில் உயர்மட்டத்திற்கு வருகிறார்கள். சில பிள்ளைகள் தங்கள் தொழில் வாழ்க்கையில் இந்தப் பயணத்தை கைவிடுகிறார்கள். நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும் ஊடகத் துறையின் அனுபவம் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த திட்டத்தின் மூலம், ஒரு துல்லியமான மற்றும் நல்ல பத்திரிகையாளரை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்.

அது மாத்திரமன்றி எதிர்வரும் ஜுன் மாதம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணியை குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு அளப்பரிய திறமைகளை வெளிப்படுத்தும் பிள்ளைகளிடம் ஒப்படைக்க எதிர்பார்க்கின்றோம். அதன்படி, நாட்டின் அரச தலைவரின் ஊடகச் செய்திகளை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்களால் சுமக்க முடிகிறது. அத்தகைய பொறுப்பை ஏற்கும் குடிமக்கள் குழுவை உருவாக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தேவை” என்றார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத்குமார மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்