பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு
அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முன்னோடித் திட்டம் 2024 மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
முன்னோடித் திட்டத்தின் கீழ், 08 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அரச பாடசாலைகளின் கல்வி முறையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அமைச்சுடன் மைக்ரோசொஃப்ட் கைகோர்த்துள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.
புதிய தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ஏற்ப பாட அறிவை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“கல்வித் துறையில் மாற்றங்களைச் செய்யும்போது, நவீன தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்குவது அவசியம். குறிப்பாக Nano தொழில்நுட்பம், Bio தொழில்நுட்பம், genetic Engineering மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அறிவை வழங்குவது அவசியம்” என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.