பொதுஜன பெரமுனவினரை தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி கையாள்கின்றமை குறித்து கவலை தெரிவிப்பு

🕔 March 12, 2024

னாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தனிப்பட்ட நபர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வது தொடர்பில் – அந்தக் கட்சி தனது கவலைகளை மீண்டும் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி சந்தித்த போதே ஜனாதிபதிக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர்களும் ஜனாதிபதியின் பக்கம் சாய்ந்ததை அடுத்து இத்தகைய கவலைகள் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சாரார் – ஜனாதிபதிக்கு விசுவாசமாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அந்தக் கட்சி இன்னும் எந்தவொரு முறையான முடிவையும் எடுக்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் முன்னைய சந்தர்ப்பத்திலும் இதேபோன்ற கவலைகளை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்