ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நேரடியாக நடத்தப்பட்டு – முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (28) அறிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
“நாங்கள் ஏலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மார்ச் 05 ஆம்திகதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இதற்காக வரலாம். இது நேரடியாக செய்யப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் ஏலங்களைத் திறந்து மதிப்பீடு செய்யலாம். அதை கையாள ஒரு தொழில்நுட்பக் குழுவும் உள்ளது. அவர்கள் ஏலங்களை மதிப்பீடு செய்வார்கள். இறுதியாக, அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 15507 கோடி ரூபாய்) முதலீடு செய்வதற்கான வலுவான முதலீட்டாளர் வர வேண்டும். அத்துடன் விமான நிறுவனத்தின் 6,000 பணியாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் அவசியம்” என்றார்.