கெஹலிய ரம்புக்வெல்ல; அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா: மருத்துவர் குழு பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு

🕔 February 18, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவர் கூறும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய – ஆலோசகர்கள் அடங்கிய 07 பேர் கொண்ட மருத்துவ குழுவினால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நீதவான் லோச்சனா அபேவிக்ரம உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய சமர்பித்த மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம முன்வைத்த சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கிரிஹாகம தெரிவித்தார்.

அவை அசல் அறிக்கைகள் அல்ல என்றும் அவை பிரதிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அறிக்கைகள் 2011 முதல் 2017 வரையிலானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் முன்னாள் அமைச்சரின் பிணைக்கு ஆதரவாக மருத்துவ அறிக்கைகளை வழங்கிய மருத்துவர் கடந்த ஐந்து வருடங்களாக, சந்தேக நபரான கெஹெலிய ரம்புக்வெல்லவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனை கூறும் நோய்களால், உண்மையில் கெஹலிய பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தீர்மானிக்க நீதவானால் நிறுவப்பட்ட மருத்துவ குழு முன்னாள் அமைச்சரை பரிசோதிக்கவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே, முன்னாள் அமைச்சரை பரிசோதிக்க நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

இந்த மருத்துவ நிபுணர் குழு வழங்கும் அறிக்கையின் பின்னரே, குறிப்பிட்ட நோய்களால் அவர் அவதிப்பட்டு வருகிறாரா என்பதற்கிணங்க – சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியுமா அல்லது வேறு எப்படி சிகிச்சை பெற வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்