போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளின் ஊடாக பெறப்பட்ட பணத்தின் மூலம், சட்டவிரோத சொத்துக்களை பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபர் மித்தெனியவில் 18 பேர்ச் காணியில் இரண்டு மாடி வீடு ஒன்றையும், மூன்று ரூட் பரப்புள்ள காணியையும், இரண்டு வாகனங்களையும் – சட்ட விரோதமாக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அவர் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு 50 மில்லியன் ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.