நினைவுக் கல்லை உடைத்த வழக்கு: ரெலோ முன்னாள் செயலாளர் ஹென்றி மகேந்திரனுக்கு அபராதம்; நஷ்டஈடு செலுத்தவும் உத்தரவு

🕔 January 31, 2024

பாறுக் ஷிஹான்

ல்முனை நகரில் ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக் கல்லை  உடைத்துத் தரை மட்டமாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் முன்னாள் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு 1500 ரூபா தண்டமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஆண்டு கல்முனை நகரில் ‘எம்.எஸ்.காரியப்பர் வீதி’  என பெயரிடப்பட்ட நினைவுக்கல்லை – ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் உடைத்துத் தரை மட்டமாக்கப்படது.

இதனையடுத்து சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும்  மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு – நீதிமன்றப் பிணையில் விடுதலை  செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில்,   நேற்று செவ்வாய்க்கிழமை (30) குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது விடயங்களை ஆராய்ந்த நீதிவான், ‘எம்.எஸ். காரியப்பர் வீதி’யின் பெயர் படிகத்தை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக அடையாளம் கண்டமையினால், அவருக்கு 1500 ரூபா தண்டபணமும், 55000 ரூபா நஷ்டஈடும் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

கல்முனை பிரதான வீதியில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதைக்கு – கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக – மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

இதனையடுத்து இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து – அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது, ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம். பாறூக் என்பவர், இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து – ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்