இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரானார் ஸ்ரீதரன் எம்.பி: எதிர்த்துப் போட்டியிட்ட சுமந்திரன் 47 வாக்குகளால் தோல்வி

🕔 January 21, 2024

லங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போது 184 வாக்குகளைப் பெற்று ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். 

கட்சியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் – தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சம்பந்தன் உள்ளிட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வுக்கு மூவர் போட்டியிட்டனர்.

அந்த அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ். ஸ்ரீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சக போட்டியாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கினார்.

தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டமையும் இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்