பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நாடு பின்னடைவை சந்திக்கிறது: எஸ்.எம். சபீஸ்

🕔 January 18, 2024

– நூருல் ஹுதா உமர் –

ல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறைமை காரணமாக, நமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திப்பதாக கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

“வளர்ச்சி அடைந்த நாடுகளில் – பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அவர்களது தகமைக்கு ஏற்ப இணைத்துக் கொள்ளும் நடைமுறை காணப்படுகின்றது. ஆனால் எமது நாட்டின் பல்கலைக்கழகங்கள் ‘இசட் ஸ்கோர்’ எனும் முறையில் மாணவர்களை நிராகரிக்கும் முறை காணப்படுகின்றது. இதனால் எமது நாடு வேகமாக வளர்ச்சியடைவதில் பின்னடைவை சந்திக்கிறது” எனவும் அவர் கூறினார்.

மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை நெனசலவில் இன்று (18) இளைஞர்களுக்கு நடைபெற்ற தொழில் வழிகாட்டல், திறன் மேம்படுத்தல் செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்நிலை மாற்றம் பெற்று எல்லா மாணவர்களும் அவர்களின் தகுதிகளுகேற்ப, தாம் விரும்புகின்ற துறையில் கல்வி கற்கக்கூடிய விதத்தில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் தமது வருமானத்துக்கேற்ப மானியங்களை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கினாலும், ஏனைய மாணவர்களிடம் கட்டணம் செலுத்தும் முறையிலாவது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யவேண்டும். முடியாது விட்டால், முறையான தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆங்கில மொழி ஆளுமையில் தேர்ச்சி பெறுவதிலும் ஒருமைப்பாட்டோடு புதிய தொழில் முயற்சிகளில் கால்பதிப்பதன் ஊடாகவும் – சமூகம் ஒற்றுமையாக முன்னேற முடியும் என்றும், அதனூடாக நாடும் முன்னேறும் எனவும் சபீஸ் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்