18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

🕔 January 3, 2024

ரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்; 

“நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, அரசின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயமாகும். என்றாலும், கோப்பைத் திறந்தவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பது அர்த்தமல்ல. தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்” என்றார். 

வரி அடையாள எண்ணை (TIN number) பெறுவதால் மாத்திரம் எவரும் தன்னிச்சையாக வருவான வரிவிதிப்பிற்குட்பட மாட்டார்கள் எனவும், வருடாந்த வரி விலக்கு வரம்பான 1.2 மில்லியன் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே வரி செலுத்தும் கட்டாயம் உள்ளதாகவும் ஏற்கனவே நிதி அமைச்சு தெரிவித்தது.

ஆனால், பெப்ரவரி 01ம் திகதி முதல் – நடப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் நிதியமைச்சு குறிப்பிட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்