அடுத்த தேர்தலில் அதிகாரத்தை பெறுவதே இலக்கு; எதிர்கட்சி தலைமைத்துவத்தை பெறும் எதிர்பார்ப்பு இல்லை: மஹிந்த ராஜபக்ஷ

🕔 December 27, 2023

– முனீரா அபூபக்கர் –

டுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ எமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) ‘கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்’ கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பக் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி’ கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கிரிந்திவெல மகா வித்தியாலயத்தை மையமாகக் கொண்டு கடந்த (25) ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் ஆரம்பமானது.

அது 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இது அரச, பகுதியளவிலான அரச மற்றும் தனியார் துறைகளில் 50 க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் வர்த்தக கடைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் வழங்கிய பதில்களும் வருமாறு;

கேள்வி – அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பீர்களா?

பதில் – அப்படி எதுவும் இல்லை. தற்போது இருக்கின்ற அமைப்பாளர்களின் தவறில்லை. தேர்தலும் உண்டு.

கேள்வி – கட்சியில் இருந்து விலகியவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை என்ன?

பதில் – கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த விஷயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

கேள்வி – இந்நாட்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.

பதில் – இந்த அரசாங்கம் செய்த சிறந்த பணியாக நான் இதைக் கருதுகிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிந்து வருகிறது.

கேள்வி – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க நீங்கள் தயாராகி வருவதாகப் பேசப்படுகிறது. அது உண்மையா?

பதில் – இதுவரை அப்படி ஒரு கதை இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. எதிர்க்கட்சிக்கு செல்லும் எதிர்பார்ப்பு எம்மிடம் இல்லை.

கேள்வி – எதிர்காலத்தில் வரி குறைக்கப்படுமா? அதிகரிக்கப்படுமா?

பதில் – வரிகளை நீக்க முடியாது, வரிகள் இருக்கும். அதாவது மக்களுக்கு நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்