38 பவுண் தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், கதிர்காமம் ஆலய பிரதம பூசகர் கைது
கதிர்காமம் தேவாலயத்துக்கு வழங்கப்பட்ட தங்கத் தட்டு காணாமல் போனமை தொடர்பில், ஆலயத்தின் பிரதான பிரதம பூசகர் சோமிபால ரி. ரத்நாயக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இன்று (27) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (சிசிடி) சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்து கிடந்த, இலங்கையிலிருந்து தப்பியோடிய ‘அங்கோட லொக்கா’ என்ற பிரபல பாதாள உலக நபரின் மனைவி, 2019ஆம் ஆண்டு கதிர்காமம் தேவாலயத்துக்கு 38 பவுண் எடையுடைய தங்கத் தட்டை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரதம பூசகர் சோமிபால ரத்நாயகவின் அறைக்குள் தங்கத் தட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
இந்த நிலையில் குறித்த தங்கத் தட்டு காணாமல் போனதை அறிந்ததும், கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே மூலம் 2021 இல் முறைப்பாடு செய்யப்பட்டது.
பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.