ஆலையடிவேம்பு பிரதேசத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இளைஞருக்கு விளக்க மறியல்

🕔 December 25, 2023

கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை – விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

ஆலையடிவேம்பு – நாவக்காடு பகுதியைச் சேர்ந்த இரும்பு ஒட்டும் (வேட்டிங்) தொழில் செய்து வந்த – மூன்று பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றிருந்த 20 வயதுடைய சந்தேக நபருக்கும் – கொலையுடண்டவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கொலை செய்யப்பட்டவரை சந்தேக நபர் தள்ளி விட்டுள்ளார் என்றும், கீழே விருந்தவரின் தலை அடிபட்டமையினால் உயிரிழந்தாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் சந்தேக நபரை – அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இன்போதே, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, கொலையுண்டவரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்