பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம்

🕔 December 24, 2023

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள கரும்புக் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸாருக்கு நேற்று (23) கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து, மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே  – இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான  கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு  காரணமாக அமைந்திருக்கலாம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை  இடம்பெற்றதாகவும்,  பின்னர்   அருகில் இருந்த வீடு ஒன்றில் சடலம் மறைக்கப்பட்டு, சனிக்கிழமை  அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பதும், விசாரணைகளில் தெரிந்துள்ளது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22) காலை வாங்காமம் பகுதியில் உள்ள தனது பண்ணையை  பார்வையிடுவதற்காக சித்தீக் ஹாஜியார் – வீடு திரும்பவில்லை என,  உறவினர்கள் தேடிச் சென்ற வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்