பள்ளக்காட்டில் மறைந்திருந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

🕔 December 23, 2023

– முன்ஸிப் –

ல்முனையைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் வியாபாரியொருவர், பள்ளக்காடு பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில், குறித்த போதைப்பொருள் வர்த்தகர் கைதானார்.

இவர் பல்வேறு தடவை கைது செய்யபபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டவர் எனத் தெரியவருகிறது. தற்போது ‘யுக்திய’ எனும் பெயரில் நாடளாவிய ரீதியாக பொலிஸார் மேற்கொண்டு வரும், போதைப்பொருள் தடுப்பு – சிறப்பு நடவடிக்கையினை அடுத்து, மேற்படி சந்தேக நபர் – பள்ளக்காடு பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவரிடமிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் 18 வயது பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டார்கள்

பின்னர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தகவலின் பிரகாரம், மேலும் மூவர் அக்கரைப்பற்று பகுதியில் வைத்து கைதாகினர்.

இதேவேளை, போதைப் பொருள் வியாபாரிகள் எனும் சந்தேகத்தின் பேரில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேலும் இருவர், நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு – சிறப்பு நடவடிக்கை, தமது பிரிவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்