இஸ்ரேலில் வேலை வாய்ப்பு; 10 ஆயிரம் பேரில் முதல் தொகுதி இலங்கையர்கள் திங்கள் சென்றனர்
இஸ்ரேலில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்ட – முதல் தொகுதி இலங்கையர்கள் அங்கு சென்றுள்னர்.
வேலை வாய்ப்புகள் தொடர்பாக, இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 30 இலங்கையர்கள் குழுவொன்று திங்கட்கிழமை (8) இஸ்ரேலுக்குப் புறப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்படிக்கையின் பிரகாரம், அடுத்த சில வாரங்களில் 10,000 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்த வேலைகளுக்காக எந்தவொரு தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.
வெளிநாடு சென்ற பின்னர் யாராவது பணம் கொடுத்து இந்த வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொண்டமை தெரியவந்தால், அவர்கள் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வேலைக்காக பணம் வழங்கியிருந்தால் அவர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் இரு அரசாங்கங்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.