இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – இலங்கைக்கு 03 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையிலுள்ள இந்தியத் தமிழர்கள் – இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைகின்றமையை ஒட்டி நடத்தப்படும் ‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்க அவர் வந்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்த அவரை – நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – வானூர்தி ஊடாக கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.