இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வுக்காகப் போராடுகின்றனர்: ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ்

– நூருல் ஹுதா உமர் –
முழு உலகமும் சமமான கட்டமைப்பு, மனித உரிமைக்கான மரியாதை மற்றும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுமிக்க சமாதானம் நிறைந்த சூழலின் தேவைப்பாட்டில் உள்ளது என, 16 ஆவது ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ (Global Youth peace Fest 16) ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலுடன் எமது உலகை சமாதானம் நிறைந்த சூழலாக வடிவமைத்துக் கொள்வதற்கான ஒண்றிணைந்த முயற்சியில் தாங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
16 ஆவது ‘உலகளாவிய இளைஞர் அமைதி விழா’ (Youth peace Fest 16) நேற்று (30) பண்டாரநாயக்க ஞபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது, உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;
“தற்காலத்தில் நாங்கள் வளங்களின் தட்டுப்பாட்டை அனுபவிக்கின்றோம், அத்துடன் இவ்வளங்களை வினைத்திறனற்ற முறையில் முகாமைத்துவம் செய்தமையானது, முரண்பாடுகளின் விளைவால் ஏற்படும் அமைதியின்மையைக்கு இட்டுச்சென்றுள்ளது.
அண்மைக்காலமாக உக்ரைன் – ரஷ்ய நாடுகளுக்கிடையிலான யுத்தம், இவ்விரு நாடுகளில் மாத்திரம் மோசமான விழைவுகளை ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் அதன் தாக்கம் வியாபித்துள்ளது. இவ்விரு நாடுகளின் உணவு மற்றும் சக்தி வளங்களில் தங்கி வாழும் நாடுகள் நெருக்கடிகளையும் மற்றும் சமூக – பொருளாதார கோளாறுகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது.
அமைதியின்மை என்பது பூகோளமயமானதொரு நிகழ்வாகும். அது பூகோளமயமான சமூக – பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரத்தை பாதிக்கிறது. அமைதியின்மையை, நாம் பூகோளச் சூழலிலே நோக்க வேண்டும். தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான சமாதானத்தைக் கட்டியெழுபும் முயற்சி – பூகோள மட்டத்தில் நிரந்தர சமாதானத்தை கொண்டுவரும் என நான் நம்புகிறேன்.
தனிநபர்களுக்கிடையேயும் சமூகங்களுக்கிடையேயும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதற்கும், சமூக மூலதனத்தை கட்டியெழுப்புவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். சமூக மூலதனம் என்பது பகிர்தளிக்கும் பண்புகள் அல்லது வழங்களை கொண்ட தொகுப்பாகும். இது சமமான கட்டமைப்பையும், மனித உரிமைக்கான மரியாதையையும், பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வுச் சூழலையும் இவற்றின் விளைவால் வளங்களை பகிர்ந்துகொள்வதில் சமத்துவத்தையும் உயர்த்தும்.
உலக சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசியினர் இளைஞர்கள் என சொல்லப்படுகிறது. இளைஞர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பு என கருதப்படுகின்றனர். இளைஞர்கள் அபிவிருத்தி முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற வேண்டும். இவர்கள் சமூக – பொருளாதார மற்றும் தலைமைத்துவ துறைகளில் பயிற்றுவிக்கப்படல் வேண்டும்.
இலங்கையில் முடிவடைந்த யுத்தம், உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற கொவிட்-19 தொற்று மற்றும் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி என்பன இந் நாட்டின் இளைஞர்களின் விருத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அவர்களின் நலிவுறுதன்மையையும் அதிகரித்துள்ளது.
இலங்கை இளைஞர்கள் அமைதி நிறைந்த வாழ்வை வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களில் பெரும்பாலானோர், விசேடமாக கிராமப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு தரமான கல்வி மற்றும் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை நோக்கிய அணுகல் குறைவாகவே உள்ளன. சிலசமயங்களில், இவர்கள் தவறாக வழிநடாத்தப்பட்டும் சித்தரிக்கப்பட்டும் வருகிறார்கள், இளைஞர்கள் ஏலவே, திறன் குறைந்த வெளிநாட்டு வேலைகளை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
இளைஞர்கள் சமாதான தூதுவர்களாக பணியாற்றுவது மாத்திரமல்லாமல் அவர்கள் சமாதானத்தில் வாழ்ந்து சமாதானத்தை அனுபவிப்பவிப்பதன் மூலம் சமாதானத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும். இந்த 16 ஆவது விழா, பூகோள சமாதானத்தில் இளைஞர்களின் பங்குபற்றலை அதிகரிக்க – அதிகமான புதுமையான திட்டங்களை கொண்டு, இளைஞர்களுக்கான களத்தை மேலும் மேம்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பலநாடுகளையும் சேர்ந்த இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் செப்டம்பர் 30 தொடக்கம் ஒக்டோபர் 02 ம் திகதி வரை இந்த மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
