பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில்

🕔 September 28, 2023

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அனைத்து மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் கலந்து கொண்டு, தங்களுடைய மாகாணங்களில் காணப்படும் பிரச்சினைகளை பிரதமர் தினேஸ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல வருட காலமாக பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்த நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் கணிசமானவர்கள் பணிபுரிகின்றனர் எனவும், இவர்களில் நிரந்தரமாக்குவதற்கான வயதையும் தாண்டிய நிலையில் பலர் உள்ளனர் எனவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதரிடம் ஆளுநர் வலியுறுத்தினார்.

ஆளுநரின் கோரிக்கையை ஏற்ற பிரதமர்,பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் பெற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்