திலீபனின் நினைவு ஊர்வலத்தை சிங்களப் பிரதேசம் ஊடாக கொண்டு சென்றமை நல்லிணக்கத்துக்கு குந்தகமான செயல்: கிழக்கு ஆளுநர் செந்தில் கண்டனம்
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் – நாடாளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்கும் செயல் என, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்;
“பொலிஸ் அனுமதி இன்றி திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால், சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றமை, இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.
தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது – நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது” என்றார்.
மேலும் எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
உண்ணாவிரதமிருந்து மரணித்த விடுதலப் புலிகள் அமைப்பு உறுப்பினர் திலீபனின் நினைவு தினைத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு, அவரின் உருவத்தைச் சுமந்த வாகன ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் ஈடுபட்டிருந்தார். இதன்போது திருகோணமலையில் வைத்து அவர் மீது ஞாயிற்றுக்கிழமையன்று சிங்களவர்களைக் கொண்ட ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
(ஆளுநரின் ஊடகப் பிரிவு)
தொடர்பான செய்தி: கஜேந்திரன் எம்.பி மீது நடத்தப்பட்ட ‘வெட்கக் கேடான’ தாக்குதலுக்கு சுமந்திரன் கண்டனம்: நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை