எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

🕔 September 12, 2023

– முனீரா அபூபக்கர் –

லங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அசேல ருகவ மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக பிரான்சில் Collected Localization Satellites (CLS) நிறுவனத்தின் கடல்சார் பாதுகாப்புப் பணிப்பாளர் டேவிட் பஜுகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஒரு வருட காலத்துக்கு இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும். திட்டத்தின் மொத்த மதிப்பு 601,810 யூரோக்கள். இந்த திட்டத்தின் முழு நிதி செலவும் பிரான்ஸ் அரசால் வழங்கப்படுகிறது.

இலங்கை கரையோரத்தில் கப்பல்கள் செல்லும் வழிகளை அடையாளம் கண்டு, எண்ணெய் கசிவுக்கு எதிராக உடனடியாக பதில் நடவடிக்கை கொடுப்பதும், சட்டத்தை அமுல்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக செயல்படும் இலங்கை, முக்கிய கப்பல் பாதையில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கையானது, சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் தினமும் சுமார் 300 – 350 கப்பல்கள் கடந்து செல்வதால், கடற்பகுதியில் கடல் போக்குவரத்து அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், வருடாந்தம் 525 மில்லியனுக்கும் அதிகமான மெற்றிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதனால், கடல் விபத்துகள் ஏற்பட அதிக சந்தர்ப்பமும் உள்ளது.

கப்பல் துறை வளர்ச்சி மற்றும் துறைமுக அபிவிருத்தியால் இந்நாட்டின் கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, கப்பல்களால் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் குறித்த தகவல்களை விரைவாகப் பெறுவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என – இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கப்பல்களால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது, மாசுபாட்டிற்கு காரணமான கப்பல்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும்.

இதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஜீன் அலெக்சாண்டர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஏ.ஜே.எம். குணசேகர, முப்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்