மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்
![](https://puthithu.com/wp-content/uploads/2023/09/Police-012.jpg)
மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று – மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் கூறி, பணத்தை கொடுக்காது முச்சக்கரவண்டியில் குறித்த பொலிஸ பரிசோதகர் தப்பி ஓடியுள்ளார்.
இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.சி. கமராவில் பதிவாகியிருந்த நிலையில், ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியது.
குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
அவர் சம்பவதினத்தன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்புக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்று, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாது தலைமறைவாகியதாகத் தெரியவருகிறது.
குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று 7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 7 தடவை பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.