முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு

🕔 August 29, 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவிடம் இன்று (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் மும்மொழிவுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி முன்னாள் ஆளுநர் அசாத் சாலி – நீதி அமைச்சருடனான சந்திப்பின் போது கூறுகையில்;

இந்த அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களையே நாட்டின் முழு முஸ்லிம் சமூகமும் ஏற்றுள்ளது எனவும் தேவைப்பட்டால் எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்குள் இவ்வறிக்கைக்குச் சார்பாக ஒரு மில்லியன் கையெழுத்துக்களைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்தார்.

“முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டம் இந்நாட்டு முஸ்லிம் மக்களின் உரிமையாகும், அது இம்மக்களின் விருப்பங்களுக்கு உட்பட்டவாறே திருத்தப்பட வேண்டும். அதனை சமய விதிகளுக்கு முரண்படாத வகையிலும், மக்களின் அபிலாஷையினைப் பிரதிபலிக்கும் விதமாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திருத்தத்திற்கான பரிந்துரையாக அமைத்துத் தந்துள்ளது” என்றார்.

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தினை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் திருத்தி அமைக்க நினைப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் கூறினார்.

முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர்களாலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும், முஸ்லிம் சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு அமைவாக, முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தைத் தாங்கள் நீதி அமைச்சராக இருக்கும் காலத்திலேயே நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் அசாத் சாலி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

இங்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணி நுஸ்ரா சறூக் இது குறித்து கூறும்போது; “முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது, முஸ்லிம் சமூகத்தினை ஆளுகின்ற சட்டமாகும். அதன் திருத்தங்களை முஸ்லிம்கள்தான் கையாள வேண்டும், அது பற்றிய திருத்தத்தில் எமது கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துடையவர்கள் எமது சமூகத்தில் மிகச்  சிலர் மட்டுமே உள்ளனர். பெண் காதி நீதிபதிகள் நியமனத்துக்கு சிலர் வெளிநாடுகளைச் ஆதாரமாகக் காட்டுகின்றனர், ஆனால் அதனை எமக்கு ஆதாரமாக எடுக்க முடியாது. நாம் ஷரீஆவை பின்பற்றி மட்டுமே இச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.

பெண் காதி நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கருத்துரைத்த அல் – ஆலிமா டொக்டர் மரீனா தாஹா ரிபாய்;  1400 ஆண்டுகளாக இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு பெண் காதி நீதிபதிகளும் நியமிக்கப்படவில்லை எனவும், அது ஆழ்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் காதி நீதிபதிகளின் மாதாந்த ஊதியம் ஒரு சிறிய தொகையாகும் என்றும் அதுவும் காதி நீதிமன்றங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு காரணமாகின்றது எனவும் கூறிய அவர், எனவே அது பற்றியும் நீதி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்