சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்
– எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தத்தினை அடுத்து, இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று, மேற்படி சிறுவர் பூங்காவினை அமைத்துக் கொடுத்திருந்தது.
இந்த சிறுவர் பூங்காவானது, ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் – சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக பயன்பட்டு வந்த போதிலும், காலப்போக்கில் சரியான பராமரிப்பின்மையால் பயன்பாடற்றுக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.