பால் மாவுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு, முட்டைக்கு குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது.
உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா மிரர் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பால் மா இறக்குமதிக்கு பொருந்தும் சுங்க இறக்குமதி வரி 20% அல்லது ஒரு கிலோவுக்கு 225 ரூபாய், எது அதிகமாக இருக்கிறதோ அதுவாக அமையும் என திறைசேரி தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் துறை இறக்குமதியை ஊக்குவிக்கும் பொருட்டு – இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் மீதான விசேட வரியை ரூபா 50 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக திறைசேரி குறைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இதுவரை அரசு மட்டுமே முட்டைகளை இறக்குமதி செய்து வந்தது.
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் முட்டைக்கான விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் முட்டை விலை சரிந்து வருகிறது.
இதேவேளை கோழிப்பண்ணை தொழிலில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கான வரியை அரசாங்கம் குறைத்தால், முட்டையின் விலையை மேலும் குறைக்க முடியும் என உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.