துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மின் கட்டணத் தொகையை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ‘சிவப்பு பட்டியல்’ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளருக்கு ஏற்கனவே இது தொடர்பில் அறிவித்திருந்த போதிலும், இன்னும் கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும் அவமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை விமர்சித்த ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்துவேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் தனது அலுவலகத்தை மாற்றுமாறு தாம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் அதற்கு எவரும் பதிலளிக்கவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.