‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

🕔 August 21, 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது.

சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வரவேற்பளித்ததோடு, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை பலப்படுத்திக்கொண்டு, முன்னோக்கிச் செல்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்ததோடு, உணவுப் பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

அதனையடுத்து சிங்கப்பூர் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்,
‘எமது நட்புறவானது மனிதர்களின் அடிப்படையிலேயே வலுவாக நிலைத்து நிற்கும்.
அந்த தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் பலன்மிக்கதாகவும் வெற்றிகரமானதாகவும் அமையட்டும்’ என பதிவிட்டிருந்தார்.

பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் (Ng Eng Hen) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றும் இன்று (21) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல், தெற்காசிய வலயத்தின் பொது பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் மற்றும் உரிய வகையிலான தொடர்பாடல்களை பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். வலயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ள இரு தரப்பும் அர்பணிக்க வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்