ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து

🕔 August 16, 2023

பாறுக் ஷிஹான்

நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்  ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லிம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது, ஒரு நபிக்கும் முஸ்லிம் மன்னன் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிகின்றார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

”ராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை கடந்த காலங்களில் நாம் தெளிவாக கூறி வருகின்றோம். ராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் ராவணன்  தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.

நிரூபிக்க முடியாத கதை

காரணம் ராவணனுடைய ஆட்சி அல்லது ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. ராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லிம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லிம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.

ராமாயணத்தில் வருகின்ற ராவணன், ராமன், சீதை, லக்குவனன், வாலி மற்றும் சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும்  நெருக்கமான இருக்கின்ற  முஸ்லிம்களுடைய   பெயர்களை போன்று  இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றது. ராவணன்.தமிழில் ராவணன். சிங்களத்தில் ராவண என்று சொல்வார்கள். இந்த ராவணன் என்பவர் யார்? இந்த ராவணன் தமிழனா? சிங்களவனா? என்ற விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில்  நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

உண்மையில் இந்த விடயம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல. படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்விடயம் 100 க்கு  70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்  விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்.

ராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் ராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதைதான் சொல்லி வருகின்றேன்.

காரணம் ராவணனுடைய ஆட்சி அல்லது ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இவ்விடயம் கிட்டத்தட்ட  7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள். கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம்.

ஆகவே ராமாயணம் என்பது ஒரு புராணக்கதை. இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது. அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல. புராணக் கதை எனும் போது – அதில் கற்பனைகளும்  இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் . ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது.

அரபு மொழிக்கு நெருக்கமாக பெயர்கள் இருப்பது ஏன்?

அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர்  பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு மொழிக்கு  நெருக்கமாக இருக்கின்ற காரணம் என்ன  என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம். இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை  நையாண்டி செய்வதைதான் நாம் பார்க்கின்றோம்.

இதில் ராமன் – ரஹ்மான், ராவணன் – ராவன்,  சீதா – சைதா, அனுமான் –  நுஃமான் என்பது ஒரு மொழியில்தான் வருகின்றது. ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது, இது முஸ்லிம்களின் ஒரு சிறிய வரலாறுதான் என்பதுடன்,  பின்னர் அது  கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான்  எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக உள்ளது.

ராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு   ஆச்சரியமளிக்கலாம். இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறல்லவா என்று சிலர் கேட்க கூடும். இது உண்மையில் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம். இஸ்லாத்தின்  வரலாறு என்பது 1400 வருடமல்ல. இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம். இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் – இஸ்லாமும் முஸ்லிம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பன   மிக  தெளிவாக கூறுகின்றன.

நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லிம் என்கின்றோம். நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டதை  இஸ்லாமிய வரலாறாக நாம் காண்கின்றோம்.

அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட  01 லட்சம் ஆண்டு வாழ்க்கை  வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது, முதல் மனிதன் காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது. முஹம்மது நபி இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை. இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர். அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்.

மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது. அவ்வாறாயின் ராவணன் ஆட்சி என்பது 2700 க்கு உட்பட்டதா என்றால்  இல்லை என்றே சொல்ல முடியும். அவ்வாறாயின் ராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.

அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும். அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழ் வரலாற்றை  கூறுகின்றார்கள். ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரமில்லை.

எது எவ்வாறாயினும் ராவணன் சிங்களவனா? தமிழனா? அல்லது இந்த நாடு யாருக்குச் சொந்தம் என்ற வாத பிரதி வாதங்களை தவிர்த்து கொண்டு, இன ஒற்றுமைக்காக பாடுபட முன்வர வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்