“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

🕔 August 15, 2023

– முனீரா அபூபக்கர் –

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

இது தொடர்பா ரஜீவ் சூரியாராச்சி தெரிவிக்கையில்;

“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபித்ததன் முக்கிய நோக்கம் இந்த நாட்டின் வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதுதான். நாட்டில் இன்னும் பல வீடற்ற குடும்பங்கள் உள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியத்தின் கீழ் – மிகவும் வறிய குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், அரச ஊழியர்களுக்கு ‘சேவாபிமானி’ என்ற கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 14% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

எங்களிடம் ‘விசிறி கடன்’ என்ற மற்றொரு திட்டமும் உள்ளது. அதன் கீழ், நாட்டில் உள்ள அரசு சாரா ஊழியர்களுக்கு 12% கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் 10 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மக்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் மக்களுக்கு நாங்கள் கடனாகக் கொடுத்த சுமார் 5 பில்லியன் பணத்தைத் திரும்பக் கிடைக்கவில்லை. தற்போது அந்த பணத்தை மீட்கும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறோம்.

எங்கள் நிறுவனத்தில் சுமார் 1,800 ஊழியர்கள் உள்ளனர். 25 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 2 நகர அலுவலகங்கள் உள்ளன. எங்களின் பிரதான அலுவலகம் கொழும்பில் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பெரும் சேவை செய்து வருகிறோம். எங்கள் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுகின்றன.

‘உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்’, ‘மிஹிந்து நிவஹன’, ‘சபிரி அடுக்குமாடி குடியிருப்புகள்’ மற்றும் பல வீட்டுத் திட்டங்கள் எங்கள் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் பல வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இவற்றில் 93,000 வீடுகள் கட்டி முடிக்கப்படவுள்ளன. அதற்கு சுமார் 24,000 மில்லியன் தேவை. இதுவரையில் எமது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊடாக ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அந்த பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, எங்கள் நிறுவனம் கடன் வசூல் மூலம் மாதந்தோறும் சுமார் 150 மில்லியன் வசூலித்தது. அந்தத் தொகை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப் போதாது. இதற்காக மாதந்தோறும் 150 மில்லியன் செலவிடப்படுகிறது. மாவட்ட முகாமையாளர்களை வரவழைத்து அவர்களுக்கு மாதாந்த இலக்கு கொடுத்தோம். நாங்கள் திறைசேரியில் இருந்து பணத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே எங்களிடம் கடன் பெற்றவர்கள் விரைவில் பணத்தை எங்களிடம் திருப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த பணத்தைப் பெற்றுத் தான் – நாம் மற்றவருக்கு கொடுப்பது.

இதுவரை, கடனை வசூலிப்பதில் இருந்து படிப்படியாக 300, 350, 400 மில்லியனை எட்டியுள்ளோம். அதிலிருந்து ஒரு நிதியை உருவாக்கியுள்ளோம். அதன் மூலம் நிறுத்தப்பட்ட கடன் திட்டங்களை மீண்டும் தொடங்கினோம்.

எங்கள் நிறுவனத்தில் அதிக அளவு சொத்து உள்ளது. நாட்டின் பொருளாதார நிலை காரணமாக வீடுகள் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கிணங்க, தனியார் துறையினருடன் இணைந்து எமது காணிகளை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம். எதிர்காலத்தில் இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட உள்ளோம். தள்ளுபடி விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்