புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள்
– பாறுக் ஷிஹான் –
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஆகிய மொழிகளில் இந்த சுவரொட்டிகளிலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றன.
‘1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் விடுதலை புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம்.
ஐநா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். .அனைவரும் பாராபட்சம் இன்றி இருங்கள்’ என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை , சாய்ந்தமருது ,கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.