தனது ஆணுறுப்பை படமெடுத்து பெண்ணொருவருக்கு அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது: சாய்ந்தமருதில் சம்பவம்

🕔 August 7, 2023

– பாறுக் ஷிஹான் –

னது ஆணுறுப்பை படமெடுத்து ‘வாட்ஸ்அப்’ ஊடாக குடும்ப பெண்ணுக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு ஆணுறுப்பைக் காட்டிய நபர் – தையல் இயந்திரம் உட்பட அரச சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பகுதியில் வசிக்கின்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரிடம் – பல அரச சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது ஆணுறுப்பினை படம் எடுத்து, அதனை அந்தப் பெண்ணின் வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடொன்று சாய்ந்தமருது பொலிஸாருக்கு இன்று (7) கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம். ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பல திருமணங்கள் செய்துள்ளவர் எனத் தெரியவருகிறது. இவர் கணவனை இழந்த பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி – தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி, அரச சலுகைகளை வழங்குவதாகக் கூறி – பாலியல் லஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபரை நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்