தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை: ராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

🕔 August 7, 2023

ரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுததும் போது பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன என்றும்,. ஆனால் அதற்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார் எனவும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த முயற்சி எடுத்து வருகின்றார். நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடம் 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து கட்சிகளையும் அழைத்து சர்வகட்சி மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

ராஜீவ் – ஜே. ஆர் ஜயவர்தன ஆகியோர் அன்று 13 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது அன்றைய அமைச்சரவையில் ஓர் அமைச்சராக அங்கம் வகித்த தற்போதைய ஜனாதிபதி, இந்த அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைக்கு நிரந்தமான தீர்வை முன்வைப்பார் என்று எனக்கு நம்பிகை இருக்கின்றது.” என்றார்.

“அதிகாரப் பகிர்வின் மூலம் நாடு துண்டாடப்படும் என்று தெற்கில் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடும் அதே நேரம், முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும், எமக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மாத்திரமே வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவை இரண்டுமே இரு தீவிர நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

13ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவதில் மிதமான போக்குடன் இருதரப்பும் சுமூகமான கலந்துரையாடல்களை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே இந்நாட்டின் முன்னேற்றத்துக்கு உகந்தது என்றும் தெரிவித்தார்.

“13ஆவது அரசியலமைப்பின் ஊடாக வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார். ஆனால் இதில் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்”.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றே தெற்கில் உள்ள கடும்போக்குவாத சில சிங்களத் தலைவர்கள் வெளியிடும் தீவிரக் கருத்துக்களால் தெற்கில் உள்ள சிங்கள மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும், இவை பெரும்பாலும் அரசியல் நோக்கங்களில் கூறப்படலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இரு தரப்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் நம்பிக்கை வைத்து செயற்படுவதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

13 ஆவது திருத்தத்தை செயற்படுத்தத் தேவையானப் பரிந்துரைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அதன்படி, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி என்ற வகையில் தமது கருத்துகளை முன்வைக்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்