உர மானியத்துக்கான வவுச்சர் உரிய காலத்தில் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் தினேஷ் குணவர்த்தன அம்பாறையில் உறுதி
🕔 August 4, 2023
– பாறுக் ஷிஹான், எஸ் .அஷ்ரப்கான், சர்ஜுன் லாபீர் –
‘புதிய கிராமம் – புதிய நாடு’ தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (4) அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோது – பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக, கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மையங்களை மேம்படுத்துவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து ஆராயப்பட்டது.
இதன்போது அம்பாறை மாவட்டத்தின் பிரதான பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு நெல் கொள் முதல் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், விவசாயிகளுக்குரிய உரமானியத்திற்கான வவுச்சர்கள் வழங்கும் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
உர மானியத்திற்கான வவுச்சர்கள் உரிய காலத்தில் கிடைப்பதன் மூலமே – நெற் செய்கையை சிறப்பாக மேற்கொள்வதுடன், அதிக விளைச்சலையும் பெற்றுக்கொள்ள முடியும் என, மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியமயை ஏற்றுக் கொண்ட பிரதமர், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளைித்தார்.
இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, உள்ளுராட்சி மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, விமல வீர திஸாநாயக்க, டள்ளியூ. வீரசிங்க, எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், திலக் ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.