முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

🕔 July 25, 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் அவரது நிலைப்பாடுகள் பற்றிய நியாயத் தன்மைகள் குறித்து தன்னுடனும் கலந்துரையாடி இருந்தபோதும், பல நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை சார் கரிசனைகள் என்பவற்றையும் (பிக்ஹுல் மகாஸித் வல் மவாஸீன்) நிலைக்களனில் ஆராய்ந்து இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் இனாமுல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில்;

‘நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ள சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

அவற்றில் பெண்கள் காழி நீதிபதிகளாக, விவாக பதிவாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனும் விடயம் தவிர்த்து, ஏனைய விடயங்களில் சகலரும் உடன்பாடுகளை கண்டுள்ளனர்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகள் – பலவருடங்களா இது தொடர்பில் ஆராய்ந்து ஸலீம் மர்ஸூஃப் அறிக்கை மற்றும் பாயிஸ் முஸ்தபா அறிக்கை என வந்து, இன்று இயன்றவரை இரண்டிலும் உள்ள கருத்தொருமிக்கும் விடயங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களது திருத்த யோசனைகளும் உள்வாங்கி இருப்பதை அவதானிக்கிறேன்.

அதேவேளை அமைச்சர் அலி சப்ரி – தான் தனித்து ஓர் அறிக்கையை தருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் பிக்ஹுல் அவ்லவிய்யாத் (முன்னுரிமைப் படுத்தல்) பிக்ஹுல் மஆலாத் (நடைமுறை சார் விளைவுகள்) பிக்ஹுல் அகல்லியாத் (சிறுபான்மை சமூக கரிசனைகள்) என இஜ்திஹாதின் பல பரிமாணங்களை கருத்தில் கொண்டு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வைக்க முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் கையொப்பமிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீமை தனிப்பட்ட முறையில் வேண்டிக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் அவரது நிலைப்பாடுகள் பற்றிய நியாயத் தன்மைகள் குறித்து என்னுடனும் கலந்துரையாடி இருந்தபோதும் பல நடைமுறைச் சிக்கல்கள் சந்தர்ப்ப சூழ்நிலை சார் கரிசனைகள் என்பவற்றையும் (பிக்ஹுல் மகாஸித் வல் மவாஸீன்) நிலைக்களனில் ஆராய்ந்து இந்த வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

அமைச்சர் அலி சப்ரியும் முஸ்லிம் சமூக பிரதிநிதியாக புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதே ராஜதந்திரமாக இருக்கும், இன்றேல் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள சட்டமூலம் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் இன்றி திணிக்கப்பட்டால் அல்லது மேலும் இழுபறி நிலைக்குள் சென்றால் அதற்குரிய பொறுப்பை (யதார்த்தத்தில் அவ்வாறு இல்லாது விடினும்) அவர் மீது மாத்திரம் சுமத்தும் நிலையும் ஏற்படலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அமைச்சர் அலி சப்ரி தவிர, 18 நாடாளுமன்று உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்