மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம்
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
எனினும், இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் அதிகாரம் தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே தீர்மானிக்க முடியும் என தெரிவித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த உதவி தொகையின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் – இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.