16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி

🕔 July 19, 2023

நிதி நிறுவனமொன்றை நடத்தி 16 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன் பின்னர், பிரதிவாதிகள் தலா 50 லட்சம் ரூபா வீதம் – இருபது மாதாந்த தவணைகளில் உரிய தொகையை செலுத்துவதற்கு நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி, முதல் தவணை இன்று செலுத்தப்படும் என, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், நுகேகொட பிரதேசத்தில் சக்விதி கட்டுமான நிறுவனத்தை நடத்திச் சென்று, அதன் வைப்பாக வைக்கப்பட்டிருந்த 164,185,000 ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர், பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்