குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்பட்டுள்ளதை காணுமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்கு சரத் வீரசேகர அழைப்பு

🕔 July 14, 2023

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர எம்.பி. கருத்து வெளிட்டிருந்தார்.

அவரது கருத்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையான கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விளக்கத்தை வழங்கியுள்ளார்.

தனது கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை வன்மையாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் – நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் எவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது என்பதை, வடக்குக்குச் சென்று பார்க்குமாறு அந்தக் கடிதத்தில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாங்கள் அனைவரும் நீதித்துறையை மதிக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவர்மீதான அச்சம் அதற்கான காரணமா? இலங்கை நீதிமன்றங்கள் குறித்து வெளியிடப்பட்ட அவமதிப்பு மற்றும் கேவலமான செய்திகளை கண்டித்து நான் – தானாகவே முன்வந்து ஜெனிவா சென்று வாதிட்டுள்ளேன் என்றும் சரத் வீரசேகர எம்.பி. தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்